ஜேர்மனியின் கோவிட்19 தடுப்பூசி திட்டங்கள் மிகவும் மெதுவாக உள்ளதாக அரசின் மீது முன்வைக்கப்பட்டு விமர்சனங்களை சான்சலர் அங்கேலா மேர்க்கெல் நிராகரித்துள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிதமான வேகத்தில் தடுப்பூசித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார்.
தொற்று நோயால் மக்கள் சோர்ந்துபோயுள்ளதை நான் அறிவேன். எனினும் அவர்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாண்டு மூன்றாம் காலாண்டின் முடிவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஜேர்மனியர்களுக்கும் முழுமையாகத் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அரசு உறுதியாக உள்ளது எனவும் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் குறிப்பிட்டார்.
தடுப்பூசிகளுக்கான ஒப்புதலை வழங்குவதற்கு முன் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அத்துடன், இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையில் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியை பேண வேண்டியுள்ளது. ஜோ்மனியின் தடுப்பூசி திட்டம் சிறிது மெதுவாக இடம்பெற இவையும் காரணங்கள் எனவும் அவா் குறிப்பிட்டார்.
ஜேர்மனியின் மாநில அரச தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் தடுப்பூசி நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளை நேற்றுச் சந்தித்துப் பேசிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அங்கேலா மேர்க்கெல் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்பாக்கப்பட்டவாறு ஜோன்சன்&ஜோன்சன் மற்றும் க்யூர்வாக் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகள் வராத சூழ்நிலையில் கூட, கோடைகாலத்தின் முடிவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஜேர்மனியர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க முடியும் என மேர்க்கெல் கூறினார். 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கான தடுப்பூசி எதுவும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இவ்வாண்டின் முதல் காலாண்டில் தடுப்பூசித் திட்டங்கள் மெதுவாக இருக்கும் என இதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேர்லின் மேயர் மைக்கேல் முல்லர் தெரிவித்தார்.
இதற்கிடையில் நோயெதிர்ப்பு சக்தி நீடிக்க ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடப்படவேண்டுமா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பான முழுமையான தெளிவுபடுத்தல்கள் இல்லை எனவும் இந்த சந்திப்பில் பங்கேற்ற ஜோ்மனிய மாநில அரச தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஜெர்மனி